August 24, 2018
தண்டோரா குழு
இரு சக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியும் விதி அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகனங்களை ஓட்டுவோரும், பின்னால் பயணிப்போரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை எனவும் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்ததாகவும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து, இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், பத்திரிகை, டிவி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.