February 27, 2019 தண்டோரா குழு
காணாமல்போன இந்திய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14ந்தேதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்திய விமானப்படை நேற்று அந்த இயக்கத்தின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி புகுந்த பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலை முதல் இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சூழலில் பாக்., எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பிடிபட்ட 2 விமானிகளில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் மற்றும் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோர் கூட்டாக இணைந்து
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தியது. இன்று பாகிஸ்தான் விமானப்படை விமானம் அத்துமீறியபோது இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை இழந்துள்ளோம். மாயமான அந்த விமானி தங்களது கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.காணாமல்போன இந்திய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் எனக் கூறினார்.