November 10, 2018 தண்டோரா குழு
தேர்தல் என்றால் வாக்களிப்பது இதைத் தவிர பிரபலமாகாத பல விஷயங்களை திரைப்படங்கள் பிரபலப்படுத்தி வருகின்றன.தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று வாக்களிக்க விரும்புபவர்கள் நோட்டாவை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் ஒரு ஆப்ஷனை கொடுத்தது. அது திரைப்படங்கள் மூலம் பெரிதும் பேசப்பட்டது. இது மட்டுமின்றி நோட்டா என்ற படமே வெளியானது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில், நம்மில் பலருக்கும் இதுவரை தெரியாத விஷயம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் நம் ஓட்டை யாராவது கள்ள ஓட்டாக போட்டுவிட்டால் 49 பி சட்டத்தின்படி நம் ஓட்டை நாமே மீண்டும் போட முடியும். இது பலருக்கும் தெரியாத நிலையில் சர்காரில் அதை தெரிவித்துள்ளனர்.
ஆம்! சர்காரின் நாயகன் விஜய் ஓட்டு போடுவதற்காக அமெரிக்காவில் இருந்து தமிழகம் வருகிறார். ஆனால் ஓட்டு போடச் சென்ற போது தான் அவருடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது.இதனால் கோபமடைந்த விஜய் 49 பி சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தை நாடி தேர்தலை நிறுத்துகிறார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு தனக்கு பிடித்தவர்கள் வாயிலாக ஆட்சிக்கு வருகிறார். நாம் ஓட்டு யாராவது கள்ள ஓட்டு போட்டுவிட்டால் அதனை திரும்ப பெறலாம் என்ற வலுவான யோசனையை இப்படம் மக்களுக்கு கொடுத்துள்ளது.
49 பி சட்டம் சொல்வது என்ன ?
1961ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் 49(1) வது விதியின் படி ஒருவரது ஓட்டு கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டது எனில் தொடர்ந்து அவரது விருப்பதற்கு ஓட்டு போடவேண்டும் என்று நினைத்தால் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் விண்ணப்பம் 17B படிவத்தை பூர்த்தி செய்து உரிய அதிகாரியிடம் கொடுத்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து. பின்னர் தங்கள் விருப்பப்படி யாருக்கும் வாக்களிக்க விரும்புகிறோமா அவர்களுக்கு வாக்களிக்கலாம்.
அதைபோல், 49 பி(2) விதியின் படி வாக்காளர்களுக்கு சீட்டு அளிக்கப்பதற்கு முன் படிவம் 17B யில் அவர் பெயர் பதிவிட வேண்டும். இதுவே அவர் பார்வையற்றவராக இருந்தால் வேறு ஒருவரதுதுணையுடன் செல்லக்கூடாது. மாறாக அங்குள்ள தலைமை அதிகாரியின் உதவியுடன் சென்று வாக்களிக்க வேண்டும்.
இதனால், இப்படத்தை பார்த்த பலரும் 49 பி என்று ஒன்று உண்மையில் இருக்கிறதா? என கூகுள் செய்து பார்த்துள்ளனர். இது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதைபோல் 49 பி சட்டத்தை பிரபலபடுத்திவிட்டோம் என்று சர்கார் படக்குழு தற்போது பெருமிதம் அடைந்துள்ளது. மேலும், 49 பி சட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகிழ்ச்சியில் முருகதாஸ் ட்விட்டரில் தனது புரொஃபைல் பிக்சராக 49P என்பதையே மாற்றி வைத்துள்ளார்.