February 27, 2019 தண்டோரா குழு
இரு தினங்களாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் விமானத்துக்கு மிக் ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த அபிநந்தன் இன்னமும் திரும்பவில்லை. அவர் சென்ற போர் விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறப்படுகிறது. இதனால், இன்று காலை முதல் இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில்,
இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை, கட்டாயத்தின் பேரிலே பதிலடி கொடுத்தோம். போரை நோக்கி செல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் அல்ல. பல போர்களை உலகம் சந்தித்துள்ளது. வரலாற்றில் ஏற்பட்ட போர்கள் அனைத்தும் தவறான அனுமானங்களால் உருவானவை; போரை தொடங்குபவர்களுக்கு தெரியாது அது எப்போது முடியும் என்று. எனவே, ஆயுதங்களை வைத்திருக்கும் நாமும் அவ்வாறு தவறாக மதிப்பிடலாமா? அத்துமீறி ஒரு நாட்டுக்குள் நுழைவது என்பது நாம் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. ஒரு போர் நடந்தால், அது என் அல்லது நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டில் இருக்காது. அதன் இழப்புகள் ஏராளம். பிரதமர் மோடியை பாகிஸ்தானுக்கு நாங்கள் வரவேற்கிறோம். பேச்சுவார்த்தைதான் சரியான தீர்வாக இருக்கும்; போரால் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது. நாம் உட்கார்ந்து பேச வேண்டும். புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா விசாரித்தால் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளளோம் என இம்ரான்கான் கூறியுள்ளார்.