December 2, 2021
தண்டோரா குழு
கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்று பரவியிருந்த தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி இருந்தது. இதற்கிடையில், நேற்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் யாரேனும் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற சோதனை நடைபெற்றது.
அதில், தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த 66 மற்றும் 46 வயதான 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் விமானத்தில் உடன் பயணித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொள்ளுவது உள்ளிட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா கொரோனா வைரசை விட ஒமிகிரான் கொரோனா வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை விடுத்துள்ளது.