March 7, 2020
தண்டோரா குழு
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இதுவரை சீனாவில் மட்டும் 3,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 91 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவிலும் கரோனா வைரஸ் நோய் பரவியுள்ளதால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் 31 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும், ஓமனில் இருந்து இந்தியா திரும்பிய தமிழருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. 34 பேரின் உடல்நிலையில் சீராக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவகுமார் தகவல் அளித்துள்ளார்.