November 6, 2025
தண்டோரா குழு
கோவை மருத்துவமனை மற்றும் மருத்துவ மையம், டிலாய்ட் பிரைவேட் (Deloitte Private) நிறுவனம் வழங்கிய மிகவும் மதிப்புமிக்க “சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் – நடுவர் சிறப்புக் கவுரவ விருதை” (Best Managed Companies – Jury Special Recognition Award) பெற்றிருப்பதில் பெருமிதம் கொள்கிறது.
இந்தச் சிறப்புக் கவுரவத்தைப் பெறும் முதல் இந்திய மருத்துவமனை கேஎம்சிஹெச் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்புமிக்க விருது அக்டோபர் 15,2025 அன்று மும்பையில் நடந்த ஒரு விழாவில் வழங்கப்பட்டது.கேஎம்சிஹெச் செயல் இயக்குநர் டாக்டர். அருண் என். பழனிசாமி மற்றும் தலைமை செயல் அதிகாரி (COO) சிவக்குமாரன் ஜானகிராமன் விருதை பெற்றுக்கொண்டனர்.
தென்னிந்தியாவின் முன்னணி பல்துறை மறுத்துவமனையான கேஎம்சிஹெச் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தரமான மருத்துவ சேவைகளை அளித்துவருகிறது.உலகளவில் மிகப்பெரிய தொழில்முறை சேவை நிறுவனங்களில் டிலாய்ட் முதன்மையானது ஆகும்.இது, உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தணிக்கை, மேலாண்மை ஆலோசனை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
டிலாய்ட் வழங்கும் இந்த உயரிய அங்கீகாரம்,நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டுத் திறமைக்கான ஒரு உலகளாவிய தரநிலையாகச் செயல்படுகிறது.தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை,நெறிமுறையான நிர்வாகம், வலுவான நிதி மேலாண்மை மற்றும் நீண்ட கால திட்டமிடல் உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் டிலாய்ட் நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறது.
பட்டியலிடப்பட்ட 25 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.அதில் 2 நிறுவனங்கள் நடுவர் சிறப்பு கவுரவ விருதைப் பெற்றன.மற்ற 6 நிறுவனங்கள் டிலாய்ட் விருதைப் பெற்றன.
கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். நல்லா ஜி. பழனிசாமி “இந்த மைல்கல் சாதனை ஒவ்வொரு ஊழியரின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும், மேலும் சிறப்பான முறையில் செயல்பட இது எங்களுக்கு ஊக்கமளிப்பதாய் உள்ளது” என்று குறிப்பட்டார்.