December 4, 2018
தண்டோரா குழு
தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பின் தன் நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்து உலக நாயகன் என்ற பட்டதை பெற்றுள்ளார். டுவிட்டரில் தொடர்ந்து ஆளும் அரசை விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அரசியல் வேலைகளுக்கு இடையே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் சேனாதிபதி கதாபாத்திரத்திற்கான மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. அதைபோல் இந்தியன் 2 படத்திற்கு பின் தேவர் மகன் 2 படத்தில் நடிக்கவிருப்பதாக கமல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தில் டுவெண்டி 20 திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 37 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் கேரளா சென்றார்.
அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
கேரள மற்றும் ஒடிசா முதல்வர்களைச் சந்தித்தேன். அவர்களின் திட்டங்களை தமிழகத்திலும் பிரதிபலிப்பேன். ‘2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். இந்தியன் 2 படம் வரும் 14ம் தேதி துவங்குகிறது. இந்தப் படத்திற்கு பின் சினிமாவில் நடிக்க மாட்டேன். நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் எங்களது கட்சியை வழி நடத்த நிதி தேவைப்படுவதால் தொடர்ந்து செயல்படும்” என்று கூறியுள்ளார்.
கமலின் இந்த அறிவிப்பால் தேவர் மகன் இரண்டாம் பாகம் என்னவாகும் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.