December 11, 2019
கோவை சிங்காநல்லூர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் ஹவுசிங் யூனிட் வீடுகள் இருப்பதாகவும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வரும் 13ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தி.மு.க., எம்எல்ஏ நா.கார்த்திக் அறிவித்துள்ளார்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சிங்காநல்லூர் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 960 வீடுகள் கட்டப்பட்டன. அதில் 300 வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இது குறித்து கடந்த 3 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் பேசினேன். மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தேன். தமிழக வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த 300 வீடுகள் இடிந்து விழுந்தால் பெரும் உயிர் இழப்புகள் ஏற்படும். சமீபத்தில் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மேலும் நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எத்தனை முறை வலியுறுத்தியும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தரமில்லாத வீடுகள் கட்டிக் கொடுத்துவிட்டு, தற்போது அது இந்து விடும் சூழலில் உள்ள நிலையில் தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
இதனை கருத்தில் கொண்டு வரும் 13ம் தேதி திமுக சார்பில் சிங்காநல்லுர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தற்போதைய ஆட்சியாளர்கள் முறைகேடுகள் செய்வதிலேயே குறிப்பாக இருக்கின்றனரே தவிர வளர்ச்சிப்பணிகளை கண்டுகொள்வதில்லை.