April 13, 2019 தண்டோரா குழு
இடதுசாரிகள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் தெரிவித்தார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
காம்ரேட் டாக்கீஸ் என்ற பெயரில் யூ-டியூப் சேனல் மூலமாக கலைதளமாக செயல்படுகின்றோம். சினிமாவில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதால், அறம் சார்ந்த அரசியலை பேசுவதற்காக இந்த சேனலை தொடங்கி செயல்படுகின்றோம். இசை கலைஞர், நாடகக் கலைஞர், நடிகர்களை ஒன்றிணைத்து இதை தொடங்கி இருக்கின்றோம்.துணிந்து சொல் என்ற பெயரில் பிரச்சாரப் பாடலையும், காவல்காரன் என்ற பெயரில் குறும்படமும் இப்போது வெளியிடுகின்றோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவற்றை வெளியிடுகின்றோம். இன்று வெளியிடும் இந்த பாடலை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் மேவானி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் வெளியிட இருக்கின்றனர். சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்கின்றோம். இடதுசாரி வேட்பாளர்கள் அறம் சார்ந்து செயல்படக் கூடியவர்கள். ஒரு வேட்பாளர் 50 வேட்பாளர்களுக்கு சமம்.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றோம். இந்த 5 தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பதில் பிரச்சினை இருக்கின்றது. அதனால், உதயசூரியன் சின்னத்தினை ஆதரிக்கவில்லை.விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் மீது தனக்கு தனிப்பட்ட மரியாதை எப்போதும் உண்டு. இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்வதால், எதிர்வினைகள் நடக்கும் என தெரியும். அதை தாண்டி தங்களின் குரலை ஒலிப்பதுதான் கலைஞர்களின் வேலை. நான் இடதுசாரி இயக்கத்தை முன்நிறுத்துபவன் என்பதால், மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க விரும்பவில்லை. அதன் ஆழமான அரசியலையும் பேச விரும்பவில்லை, என தெரிவித்தார்.