December 15, 2020
தண்டோரா குழு
கோவை அருகே ஆவாராம்பாளையம் ரயில்வே உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில் அணுகு சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை அருகே ஆவாரம்பாளையம் சாலையில் ரயில்வே கிராசிங் உள்ளது. தினமும் அவ்வழியாக 30க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது. இதனால் ரயில்கள் செல்லும் போது இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படும். ஆவாரம்பாளையம் சாலை வழியாக கணபதி, காந்திபுரம், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து இங்கு ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த மேம்பாலம் 550 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் கொண்டது. இந்த மேம்பாலம் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த உயர்மட்ட மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதனை அடுத்து மேம்பாலம் கீழ் பகுதியில் அணுகு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறுகையில்,
‘‘ ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆவாரம்பாளையம் மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அணுகு சாலை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்த தாமதத்திற்கான காரணங்கள் சரிசெய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாடிற்கு மேம்பாலம் வரும்,’’ என்றார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
‘‘ஆவாரம்பாளையம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தினமும் காந்திபுரம் வழியாக சரவணம்பட்டி சாலை செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. அதே போல் கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆவாரம்பாளையம் வழியாக மேம்பாலம் திறக்கப்பட்டால் துடியலூர் வழியாக சரவணம்பட்டி சாலையில் இருந்து காந்திபுரம் செல்ல முடியும். இதனால் மேட்டுப்பாளையம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்புள்ளது,’’ என்றனர்.