July 17, 2018
தண்டோரா குழு
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொள்ளாச்சி வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கிணத்துக்கடவு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு 950 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சர்க்கார் பகுதியில் மின் உற்பத்திக்கு பிறகு தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஆழியார் அருகே உள்ள சின்னார்பதி மலை குகையில் அமைக்கப்பட்டுள்ள ஏர் வால்வில்(காற்று குழாய்)திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் தண்ணீர் அதிகளவில் கசிந்து வருகிறது.மேலும்,அங்குள்ள மேல்மட்ட பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பழுதடைந்த பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கசிவு அதிகமாக ஏற்பட்டால் சின்னார்பதி மலைவாழ் குடியிருப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்க வாய்ப்புள்ளது.எனவே பொதுபணித் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருமூர்த்தி அணைக்கு செல்லும் தண்ணீர் ஆழியாறு அணையில் கலப்பதால் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.