June 28, 2019 தண்டோரா குழு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தங்க தமிழ்ச் செல்வன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, விரைவில் அவர் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன்
மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு நல்ல திட்டங்களை தர முடியும் என்று தேர்தல் மூலம் தெரிந்துள்ளது.
கலைஞருக்கு பிறகு அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைவராக ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் அண்ணா சொன்னதை கடைபிடிப்பவர். தமிழக மக்களுக்காக ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார். மக்களவை தேர்தலில் பெரிய வெற்றியை திமுகவுக்கு மக்கள் கொடுத்துள்ளனர். ஒற்றை தலைமையில் உள்ள கட்சி தான் சிறப்பாக செயல்பட முடியும். ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் குழப்பம் உள்ளது. அதிமுகவை பா.ஜ., பின்னால் இருந்து இயக்கி வருகிறது. தன்மானத்தை விட்டு அதிமுகவில் இணைய விரும்பவில்லை. எனது உழைப்பை பார்த்து திமுகவில் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.