January 7, 2020
தண்டோரா குழு
சர்வதேச அளவில் லோ கோட் நெட்ஒர்க் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான ஆப்வியூஎக்ஸ் ( AppViewX ) , கோவை , சென்னை மற்றும் பெங்களுரு நகரங்களில் விரிவாக்க திட்டமிட்டுள்ளது .
இந்திய தொழில்நுட்ப முனைவோரான ஆனந்த புருசோத்தமன் , கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்வியூ எக்ஸ் எனும் ஐடி ஆட்டோமேஷன் நிறுவனத்தை துவக்கினார். வேகமாக வளர்ச்சி பெற்ற இந்நிறுவனத்திற்கு பிரைட்டன் பார்க் கேட்டல் 30 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்தது. நிதி நிறுவனங்கள், சில்லறை விற்பனையகங்கள் , மருத்துவம் , சுகாதாரம் , எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் என பெயர் பெற்று , தலைசிறந்த நிறுவனங்களாக திகழும் பல நிறுவனங்களுக்கு சேவையாற்றி வருகிறது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் புருஷோத்தமன் கோவையில்
செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
இந்தியாவில் விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான விநியோகம் இவற்றை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் முழுமையான தகவல் தொழில்நுட்ப தானியங்கி தளத்தை புதுமையான முறையில் வழங்க உள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,ஆண்டுக்கு ஆண்டு நூறு சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு உள்ளதாகவும் அதன் பொருட்டு முக்கிய நகரங்களான சென்னை,பெங்களூரு, கோவையில் ஆப்வியூஎக்ஸ் விரிவாக்கத்தை விரைவில் துவக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.