December 21, 2019
தண்டோரா குழு
ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.டி.ஜி.பி. ரவி தெரிவித்தார்.
கோவை கிருஷ்ணா கல்லூரியில் இந்தியன் சைபர் காங்கிரஸ் அமைப்பின் நான்காம் பதிப்பி தொடக்க விழாவில் உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.டி.ஜி.பி. ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
அரசியலமைப்பு சட்டத்தின் நுணுக்கங்களும் மாண்புகளுன் தான் நம்மை பாதுகாக்கும்.அதை நாமும் பாதுக்காக வேண்டும். சர்வதேச அளவில் இந்தியா தனக்கான சைபர் தளத்தை உருவாக்கி தக்கவைத்து கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவுகள் நமக்கு அடிமையாக தான் இருக்க வேண்டும்.மனித அறிவு தான் என்றும் மேலே இருக்க வேண்டும். செயற்கை கண்டுபுடிப்பு நமக்கு கீழ் தான் இருக்க வேண்டும். புலனாய்வு அமைப்புகளுக்கு சைபர் க்ரைம் தொடர்பான அறிவும், பயிற்சியும் அளிக்க வேண்டும். இதற்கான தனி பிரிவியை உருவாக்க வேண்டும். சைபர் க்ரைம் , சைபர் தளம் குறித்தும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். நீதிதுறையில் சைபர் வழக்குகளை விசாரிப்பதிலும், தீர்வு காண்பதிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி,
விரைவில் தமிழகத்தில் மாவட்டம்தோறும் சைபர் கிரைம் காவல்நிலையங்கள் துவக்கபடும். அனைத்து காவல்நிலையங்களும் எதிர்காலத்தில் சைபர் கிரைம் காவல்நிலையஙகளாக மாறும். போக்சோக்கு தனி நீதிமன்றங்கள் உள்ளது போல், சைபர் கிரைம் குற்றங்களுக்கான நீதிமன்றங்கள் அமைவது எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதது. பெரும்பாலான ஆபாச படத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இருக்கின்ற ஆபாச தளங்களை முடுக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆபாச படம் பார்ப்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாபான நகரங்களாக கோவை, சென்னை திகழ்கின்றன என்றார்.