January 12, 2021
தண்டோரா குழு
என் எம் சி டி சேவை நிறுவனம் சார்பாக ஆனைகட்டி சொரண்டி மலை கிராமத்தில் வசிக்கும் 150 மலை வாழ் குடும்பங்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் காரமடை வட்டார பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கடந்த 30 ஆண்டுகளாக என்.எம்.சி.டி சேவை நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .
இதன் ஒரு பகுதியாக மகேந்திரா கிராமப்புற வீட்டுவசதி நிதியுதவி நிறுவனத்துடன் இணைந்து ஆணைக்கட்டி பகுதியை சேர்ந்த 6 மலைவாசி கிராமங்களில் வாழும் 150 மலைவாழ் குடும்பங்களுக்கு அரிசி உட்பட்ட 19 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கான விழா,ஆனைக்கட்டி சொரண்டி மலைக்கிராமத்தில் நடைபெற்றது. என் எம் சி டி சேவை நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் ஏ .எஸ் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்ற இதில், மகேந்திரா கிராமப்புற வீட்டுவசதி நிதியுதவி நிறுவனத்தின் மண்டல வர்த்தக தலைவர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலை வாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில்,மகேந்திரா நிறுவனத்தின் பல்வேறு துறை அதிகாரிகள் செந்தில் குமார் ரமேஷ், கருப்பசாமி, கோகுல் நாதன் ராஜேஷ் மகேஷ் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.. இதேபோல கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வாழும் 2000 ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.