May 30, 2019
தண்டோரா குழு
ஆந்திர முதல்வராக ஒய். எஸ் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திராவில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., 151 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களை கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.நடிகர் பவன் கல்யாணின், ஜனசேனா, ஒரு தொகுதியில் வென்றது.
இதனையடுத்து, விஜயவாடாவில் நடந்த விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆந்திர ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சர்கள், ஜூன் 6 ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
இந்த விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் அவரது கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். மேலும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.