November 22, 2019
தண்டோரா குழு
ஆதரவற்ற குழந்தைகளின் கனவை நனவாக்கும் வகையில் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 குழந்தைகள் மற்றும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி திருநங்கை சிறுமி ஆகியோரை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.
குழந்தைகளுக்கு பயணங்கள் என்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். அதுவும்ஏழைக் குழந்தைகளுக்கு விமானத்தில் பயணம் என்பதெல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதுபோன்ற ஒரு கனவு சென்னையில் உள்ள ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு நனவாகியிருக்கிறது. வானமே எல்லை என்ற பெயரில் சென்னையில் இருந்து கோவை வரை ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த 25 பள்ளிக் குழந்தைகள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு, வி.ஜி.பி தமிழ்சங்கம் மற்றும் பார்க் கல்வி குழுமத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.சென்னை விமான நிலையத்தில் காலை உணவை முடித்த குழந்தைகள் விமானத்தில் முதன்முறையாக ஏறி மகிழ்ச்சி அடைந்தனர். வானவெளியில் உயரத்தில் பறந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இன்னொரு முறை விமானத்தில் பறக்க வேண்டும் என தோன்றியதாகவும் குழந்தைகள் தெரிவித்தனர். அவர்களுடன் ஏ ஆர் ரகுமானின் சகோதரி இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹானா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பயணம் செய்தனர்.
கோவை விமானநிலையம் வந்திறங்கிய குழந்தைகளை தன்னார்வ அமைப்பினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் மதிய உணவை முடித்துவிட்டு கோவையில் ஜி டி கார் மியூசியம், ஈஷா யோகா மையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றனர். தொடர்ந்து கோவையில் இரவு உணவை முடித்துவிட்டு ரயில் மூலமாக சென்னை திரும்புகின்றனர்.