October 14, 2019
தண்டோரா குழு
அழிந்து வரும் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க கோவை மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் விவசாய உற்பத்தியில் மஞ்சள் விவசாயம் நாளடைவில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது. மஞ்சள் விவசாயம் மேட்டுப்பாளையம், அன்னூர், சத்தியமங்கலம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, சுல்தான்பேட்டை, சூலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மேற்படி மஞ்சள் சாகுபடி ஆள் பற்றாக்குறை உற்பத்தி செலவு, தட்பவெப்ப சூழ்நிலை உற்பத்தி மகசூல் பாதிப்பு மற்றும் விலை பற்றாக்குறை போன்ற காரணங்களால் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.மஞ்சள் உற்பத்திக்கு விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டு வருவதால், மஞ்சள் சாகுபடி என்பது முற்றிலும் கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இக்கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி ஆராய்ந்து தக்க அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்து அழிந்து வரும் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.