January 17, 2019 தண்டோரா குழு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.45 மணிக்கு முடிவடைந்தது.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள்
ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும்,நேற்று மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதில்,700-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 714 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். வெற்றி பெற்ற மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கு தங்கக்காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 40 பேர் காயமடைந்தனர்.
மேலும்,பரமப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல்,
போட்டியில் 15 காளைகளை பிடித்த சிறந்த வீரராக தேர்வான ரஞ்சித்குமாருக்கு கார் பரிசளிக்கப்பட்டுள்ளது. 10 காளைகளை பிடித்த கார்த்திக்கிற்கு 2வது பரிசும், 9 காளைகளை பிடித்த அஜய்க்கு 3வது பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரை ஆட்சியர் வழங்கினர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது. ஜல்லிக்கட்டில் முதல் முறையாக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்தது என்றார்.