February 17, 2021
தண்டோரா குழு
பஞ்சமி நிலங்களை மீட்க கோரியும், அருந்ததியர் மக்களுக்கு மாநகரிலே வீடு கட்டித்தர கோரியும் சமூக நீதி கட்சியின் மகளிர் அணி சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சமூக நீதி கட்சியின் மகளிர் அணி சார்பாக புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்க கோரியும், பஞ்சமி நிலங்களை மீட்க தனி சட்டம் இயற்ற கோரியும், கோவை உக்கடம் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மாநகரிலேயே குடியமர்த்த கோரியும், அருந்ததியர் மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க கோரியும் போராட்டம் நடத்தினர்.
பின்னர், கோவை பகுதியில் உள்ள இடங்கள் பெருவாரியாக தனியார் மற்றும் அரசு அதிகாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள 23,500 கோடி ரூபாய் நிதி முறையாக மக்களை வந்தடையவில்லை என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்ட ஒதுக்கப்பட்ட 1500 கோடி ரூபாய் என்ன ஆகிற்று என்று தெரியவில்லை என்று சமூக நீதிக் கட்சியின் தலைவர் ந.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், கோவை மாநகரத்தில் இருந்து அப்புறப் படுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 25 கி.மீ க்கு அப்பால் இருந்து தூய்மைப் பணிக்காக வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மாநகரிலேயே அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் தெரிவித்தார்.கடந்த 2006 ஆம் ஆண்டு ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர், பட்டா வழங்க அரசாணை பிறப்பித்தார், இது நாள் வரை அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப் படவில்லை என்று குற்றம் சாட்டினார்.