• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருங்காட்சியகமாகிறது பழங்கால காவல்நிலையக் கட்டடம்

January 2, 2017 அனீஸ்

உதகையில் நகர மத்திய காவல் நிலையமாக (பி 1) செயல்பட்டு வந்த நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த கட்டடம் பாரம்பரிய அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இக்கட்டடத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் குறித்த வரலாற்றுப் புகைப்படங்கள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், நீலகிரியின் பழைமையான புகைப்படங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும்.

இந்த அருங்காட்சியகம் காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நட்பை ஏற்படுத்தும் வகையில், அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதகை டவுன் பகுதியில் தினசரி மார்க்கெட், புளூமவுண்டன் அருகே உள்ளது பி1 காவல் நிலையம். 1850ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக் கட்டடம் 1860ம் ஆண்டு காவல் நிலையமாகச் செயல்படத் தொடங்கியது.

இந்தக் காவல்நிலையக் கட்டடம் நீலகிரி மாவட்டத்தின் முதல் காவல் நிலையம் மட்டுமல்ல. பல வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இங்கு 1921ம் ஆண்டு காவல் ஆய்வாளாராக சேஷகிரி ராவ், துணை ஆய்வாளராகவும் ஷேக் மொய்தின் சாகிப், இஸரன் நாயர், குட்டி கிருஷ்ணன் நாயர் ஆகியோர் கான்ஸ்டபிள்களாகவும் பணியாற்றி வந்தனர்.

அந்தக் காலத்தில் மாப்பிள்ளா ரெபல்ஸ் என்ற இயக்கத்தினர் இருந்தனர். இக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த நான்கு பேரை அந்த இயக்கத்தினர் தாக்கிக் கொன்றனர்.

அவர்களின் மரணம் குறித்த தகவல் கொண்ட கல்வெட்டு இந்த காவல் நிலையத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டடம் கட்டப்பட்ட நாள் முதல் உதகை மத்திய காவல் நிலையம் இங்கு செயல்பட்டு வந்தது. சில வருடங்களுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு இந்தக் காவல் நிலையம் மாற்றப்பட்டு பழைய கட்டடம் மூடப்பட்டது.

இந்நிலையில், 150 வருடங்களுக்கும் மேலான இந்தக் காவல் நிலையக் கட்டடத்தை காவல் துறை அருங்காட்சியமாக மாற்ற வேன்டும் என உள்ளூர் மக்களும் பல தன்னார்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, தற்போது இந்தக் கட்டடத்தைப் பாரம்பரிய கட்டடமாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இக்கட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் பணியில் இருந்த காவல் துறையினரின் வரலாறு குறித்த புகைப்படங்கள், பழைமையான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், நீலகிரியின் பழைமையான புகைப்படங்கள், வன உயிரின புகைப்படங்கள், பழங்குடியின மக்களின் கலாசாரம், இயற்கை மற்றும் சுற்றுசூழல் சம்பந்தமான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறுகையில்,

“ஊட்டி “பி1” காவல் நிலையம் பழைய கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆங்கிலேயர் கால பழைமையான கட்டடத்தைப் பராமரித்து, அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரியின் வரலாறு கூறும் பழங்கால பொருட்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிக்கும் பணி தொடங்கி நிறைவுறும் நிலையில் உள்ளது, விரைவில் அருங்காட்சியகமாக திறக்கப்படும்” என்றார்.

இக்கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்றி, அவ்வப்போது இங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களை அழைத்து, கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தினால் பொதுமக்களுக்குக் காவல் துறையினர் மீது நம்பிக்கை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க