March 4, 2021
தண்டோரா குழு
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளதன் பின்னணியில் பாஜவின் பங்கு உள்ளது என கோவையில், சீதாராம்யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கோவையில் நிருபர்களிடம் கூறியது:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிமுக அரசு பாஜக சொல்வதை கேட்டுதான் செயல்படுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, மக்களின் நலனுக்காக தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பின்னால் பா.ஜ.கவின் பங்கு இருக்கிறது. இந்த விலகல், பா.ஜ.கவிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறது. எங்களது அரசியல் நிலைப்பாட்டை பொறுத்து பிற மாநிலங்களில், பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம்.கேரளா அரசு புதிய வேளாண் சட்டங்களை நிராகரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆளும் அரசு அதை ஆதரிக்கிறது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகஅரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் எங்களது எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதற்காக நாங்கள் கவலைப்படுவதில்லை. எங்கள் நோக்கம் மக்களுக்காக போராடுவது. களத்தில் என்றுமே நாங்கள் இருப்போம். நாட்டிற்கும், மக்களுக்கும் எதிராக நடக்கும் நிகழ்வுகளை எதிர்த்து நாங்கள் என்றுமே குரல் கொடுப்போம்.
பெட்ரோல் பங்குகளில், பிரதமர் மோடியின் விளம்பர போஸ்டர்கள் உள்ளன. ஆனால் அதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து விளக்கம் கேட்டு உள்ளேன். 8 கட்டமாக தேர்தல் நடத்துவது பா.ஜ. தலைவர்கள் அங்கு அதிகமாக பிரசாரத்தில் ஈடுபட தான்.
முதியோர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் அதனை பார்த்து விசாரித்து கொடுக்க வேண்டும். உச்சநீதிமன்றம், நீதிபதிகளை விமர்ச்சிப்பது தவறு. அதே நேரத்தில் தீர்ப்புகள் மீதான கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு சீத்தாராம்யெச்சூரி கூறினார்.
இந்த பேட்டியின்போது, கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.