February 27, 2020
தண்டோரா குழு
அரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டத்தில் நான் வேறு அரசியலுக்கு வர வேண்டுமா என்று இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.
திரைப்பட நடிகரும், இயக்குனருமான இரா.பார்த்திபன் எழுதிய கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு மற்றும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிசி புத்தக கடையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன்,
இரவின் நிழல் படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ளது. அதற்கான தயாரிப்பாளர் கூட இன்னும் கிடைக்கவில்லை. இருந்தாலும் அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நாம் காதலோடு ரசிக்க வேண்டும். நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று ரஜினியே சொன்னார். விஜய்யை வைத்து படம் பண்ணவேண்டும் என நினைத்து இருக்கிறேன்.அது கண்டிப்பாக நிறைவேறும். இன்னும் சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கு.அதனால் தான் நான் சினிமாவில் அரசியல் பேசிட்டு இருக்கேன். இயற்கை எய்தும் வரை இயற்கையோடு வாழ்வோம். சினிமா மூலம் கருத்து சொல்வது கடினம். படம் என்பது கருத்து சொல்வது மட்டுமில்ல வலியை சொல்வதும் தான்.
சினிமா என்பது பெரிய போராட்டம், இந்த போராட்டங்களை கடந்து தான் ஒவ்வொரு படமும் வெளிவரும். தெய்வ மகன் முதல் தேவர் மகன் வரை தேசிய விருதிற்கு சென்ற நிலையில், என்னுடைய ஒத்த செருப்பிற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காததால் தான், நானே 50 லட்சம் ரூபாய் செலவு செய்து ஆஸ்காருக்கு அனுப்பினேன்.தற்போது, இரவின் நிழல், துக்லக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். நகைச்சுவை உணர்வு கலைஞரிடம் இருந்து வந்தது. என்னுடைய ஒத்தை செருப்பு படத்திற்கு அரசு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும், ஒத்த செருப்பு படத்திற்கு விகடன் விருது கொடுக்கவில்லை என சுட்டிக்காட்டியவர், நேசிப்பும் காதலும் தான் படம்., அதற்கு விகடன் மதிப்பு கொடுக்கவில்லை என்றும், புதிய பாதைக்கு 58 மார்க் கொடுத்த விகடன் ஒத்த செருப்பிற்கு 51 மார்க் கொடுத்தது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இனி மேல் விகடன் குழுமத்திடம் இருந்து விருது வாங்க மாட்டேன் என்ற அவர், அரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டம் எனக்கு நன்கு தெரியும். சினிமாவில் சாதித்த பின் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளது என்றார்.