December 16, 2019
தண்டோரா குழு
4 மாதங்களுக்குள் அயோத்தியில் வானுயர்ந்த பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்ட தேர்தல் நவம்பர் 30ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் டிசம்பர் 07ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 12ம் தேதியும் நடைபெற்றது. 4ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 5ம் கட்ட தேர்தல் டிசம்பர் 20ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 23ம் தேதியன்று எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில், 5ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள பாகூரில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர்,
ராகுல் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோரிடம், ஜார்க்கண்டில் காஷ்மீரைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என நான் கேட்க விரும்புகிறேன். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் மாறுவதை நீங்கள் பார்க்க விரும்பவில்லையா? 370 வது பிரிவை ரத்து செய்த பின்னர், காஷ்மீர் என்றென்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. ராம ஜென்மபூமியில் ஒரு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று 100 ஆண்டுகளாக உலகம் முழுவதிலுமிருந்து இந்தியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்த தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கிவிட்டது. எனவே, 4 மாதங்களுக்குள் அயோத்தியில் வானத்தை தொடும் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்படும், என தெரிவித்துள்ளார்.