August 19, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் விவகாரத்தில் வீடியோவை மறைத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர்கள் ஆகியோர் அளித்த தவறான தகவலின் காரணமாக அவதூறு பரப்பப்பட்டு ,விவசாயி கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உண்மை நிலையை அறிந்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம் விவசாயி கோபால்சாமி குற்றமற்றவர் ஆகி விடுகிறார்.எனவே அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.மேலும் தொடர் போராட்டங்களை தவிர்த்திட வழக்கு ரத்து நடவடிக்கை உதவும்.
அதே போல் வீடியோவை மறைத்து இந்த சம்பவத்திற்கு காரணமான நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.