March 1, 2018
தண்டோரா குழு
அன்னிய முதலீடு மோசடி விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது தொழில் அதிபர் இந்திராணி முகர்ஜியின் மீடியா நிறுவனத்திற்கு சாதகமாக வெளிநாடு முதலீடுக்கு அனுமதி அளித்ததாகவும், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.305 கோடி அன்னிய முதலீடு முறைகேடாக வந்ததாகவும் புகார் எழுந்தது. இதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் அட்வான்டேஜ் ஸ்டிரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் வழியாக ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றது தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் கார்த்தி சிதம்பரம் பெயர்கள் தவிர கார்த்தி சிதம்பரம், பத்மா விஸ்வநாதன் நடத்தும் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது.அதன் அடிப்படையில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமன் கடந்த 16ம் தேதி டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.அவரிடம் விசாரணை நடத்தியதில் ஏராளமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நீதிமன்ற அனுமதியின் பேரில் கார்த்தி சிதம்பரம், லண்டனுக்கு மகளைப் பார்க்கச் சென்றார். அங்கிருந்து, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னைக்கு திரும்பியபோது சென்னை விமானநிலையத்தில் சிபிஐ அதிகாரிகளால் கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை மேலும் ஒரு நாள் சிபிஐ காவலில் எடுத்து மீண்டும் விசரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது இதையடுத்து நாளை(இன்று) பிற்பகல் மீண்டும் கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என டெல்லி பட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கார்த்தி சிதம்பரத்திடம் 14 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டு CBI மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த CBI முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.