December 21, 2019
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன்பு அனைத்து மத அடையாளங்களையும் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் இயக்கங்கள் பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் ,சட்டக் கல்லூரி மாணவர்கள் ,அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், பி எஸ் ஜி கல்லூரி மாணவர்கள்,பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் என தொடர்ச்சியாக தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இப்படியிருக்க இன்று காந்திபுரம் பெரியார் படிப்பகம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று இந்து மத அடையாளம்,முஸ்லிம் மத அடையாளம் ,கிறிஸ்துவ மத அடையாளம் ஆகியவற்றை அணிந்து மத ஒற்றுமையை காப்போம், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்போம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதேபோல குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 17 க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.