August 24, 2018
தண்டோரா குழு
குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெறுவதற்கான ஆராய்சிகளை கரும்பு ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி
வலியுறுத்தியுள்ளார்.
கோவை கொடிசியா அரங்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கரும்பு இனவிருத்தி மையம் சார்பில் உழவர் மேம்பாட்டு விழா மற்றும் கண்காட்சி இன்று துவங்கியது. இக்கண்காட்சியை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவில் 50க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விவசாய விளை பொருட்கள் விற்பனை மற்றும் மகசூல் அதிகரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமும் அளிக்கப்படுகின்றது.
முன்னதாக நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
உழவர்களுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை துவங்கிவைத்துள்ளார். விவசாய மேம்பாட்டிற்காகவும், விவசாயிகளுக்கும் அதிக நிதியை தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கியுள்ளார். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, இந்த அரசு உழவு தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதிகளவில் ரசாயனம் கலந்த உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெறுவதற்கான ஆராய்சிகளை கரும்பு ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வேலுமணி கேட்டுக்கொண்டார்.