March 16, 2021
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் சார்பாக அனுப்பப்படும் விற்பனையாளர்களை, உழவர் சந்தை நிர்வாகம் அனுமதிக்காததை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, சுந்தராபுரம் ஆகிய இடங்களில் உழவர் சந்தை உள்ளது. இதில் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை கோவை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளதால் விற்பனை அளவும், பொது மக்கள் வருகையும் அதிகளவில் உள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்க்கார் சாமக்குளம்,
பெரியநாயக்கன்பாளையம் ஆகிய
ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட விவசாயிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். தினசரி காலை விவசாயிகள் தங்கள் பகுதியில் இருந்து காய்கறிகளை கொண்டு வருகின்றனர். இங்கு திறந்த வெளிமேடையில் 14 கடைகளும், பசுமை குடிலில் 14 கடைகளும், 4 ஷெட்களில் 124 கடைகளும், திறந்தவெளி தரையில் 40 கடைகளும் என மொத்தம் 192 கடை உள்ளது.
இது தவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 10 கடை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே விவசாயிகள் சார்பாக அனுப்பப்படும் விற்பனையாளர்களை உழவர் சந்தை நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது. இதனை கண்டித்து விவசாயிகள் இன்று ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் சு.பழனிசாமி கூறுகையில்,
” தோட்ட வேலைகளில் கவனம் செலுத்தும் விவசாயிகள் தங்கள் சார்பாக ஒரு விற்பனையாளரை உழவர் சந்தைக்கு அனுப்புவது வழக்கமான ஒன்று தான். விவசாயிக்கு பல்வேறு வேலைகள் இருக்கும் கால்நடைகள் பராமரிப்பு, தண்ணீர் பாச்சுவது என. விவசாயிகளே நேரடியாக வந்தால் அந்த வேலை பாதிக்கும். அவர்களுக்கு இழப்பு ஏற்படும். ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் சார்பாக அனுப்பப்படும் விற்பனையாளர்களை அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் போராட்டம் தொடரும்,” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.