February 12, 2019 
தண்டோரா குழு
                                தமிழ் திரையுலகில் எந்த வித பின்னணியும் இல்லாமல் நுழைந்து தற்போது முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் தன் நடிப்பின் மூலமும், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்யும் விதத்தின் மூலமும் ரசிகர்களிடம் பழகும் விதத்திலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.  
இதுமட்டுமின்றி, பேரறிவாளன் விடுதலை என பல்வேறு  சமூக அவலங்களுக்கு எதிராகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கேரளாவிற்கு சென்ற அவர் சபரிமலைப் பிரச்னையில், ‘மாதவிலக்கு துய்மையான ஒன்றுதான், அதனால் இந்த பிரச்னையில் நான் முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன்’ என்றார். இது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பினாலும் மறுபுறம் இவருக்கு ஆதரவு குவிந்தது.  இந்நிலையில் ‘பகவத் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைக்கு சீரழிவுக்கு இது போன்ற கற்பானையால் உருவாக்கப்பட்டநூல்களே காரணம்’ என்று விஜய் சேதுபதி கூறியதாக அவதூரான
செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இந்த தகவல் விஜய் சேதுபதி காதிற்கு எட்டியது. 
உடனே விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில்,  
“என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும், ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்’ என  பதிவிட்டுள்ளார்.