September 20, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 200 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
நோயாளிகளுக்கு கை, கால், குடல், மூளை உள்பட இடங்களில் ஏற்படும் ரத்த நாள அடைப்புகளால் அந்தப்பகுதி அழுகி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு தாங்கமுடியாத வலி ஏற்படும். அத்தகைய சமயங்களில் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
அடைப்பினை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் கண்டறிந்து உடனடியாக அடைப்பை அகற்றி ஆபத்தை தவிர்க்கலாம். நுண்துளை அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 200 பேருக்கு ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்தநாள அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதியவர்கள், இருதய நோயாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள முடியும்.
தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். இங்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர்கள் தீபன்குமார், ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.