August 31, 2021
தண்டோரா குழு
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்துவந்த வடமாநில இளைஞனை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான காவல்துறையினர் பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்த வட மாநில இளைஞன் போலீசாரை கண்டது இருசக்கர வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளான். இதையடுத்து போலீசார் அவனை விரட்டிப் பிடித்து சோதனை செய்தபோது அவன் வைத்திருந்த மூட்டையில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மண்டூஸ் குமார் என்பதும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவருவதும், தற்போது கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவனிடம் இருந்து 5 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு செல்போன் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவனை நீதிபதிமுன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.