August 18, 2021
தண்டோரா குழு
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சம்பளம் வழங்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு பணிக்கு திரும்பினர்.
கோவை மாநகராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்கு முன்னதாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் 10-ம் தேதிக்குள் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நடப்பு மாதத்தில் நேற்று மாலை வரை ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.இந்நிலையில் நடப்பு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரியும், சரியான தேதியில் சம்பளம் வழங்க வலியுறுத்தியும்,கோவை மாநகராட்சி 44-வது வார்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று காலை பணிகளை புறக்கணித்து அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜாகீர் உசேன் தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.மாநகராட்சி உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.