August 17, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ராமலிங்கம் காலனி, பாரதி பூங்கா சாலையில் உள்ள மீனாட்சி மகப்பேறு மைய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் பதிவு செய்து பராமரிப்பது குறித்த பதிவேடுகள், புற நோயாளிகளின் பதிவேடு மற்றும் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது ஆகியவற்றை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அந்த மையத்தில் ரூ.37.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தின் பணிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியன், செயற்பொறியாளர் (மேற்கு மண்டலம்) பார்வதி மற்றும் பலர் உடனிருந்தனர்.