August 12, 2021
தண்டோரா குழு
கோவையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோரிடம் தொழில்துறையினர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவையில் சிறப்பு முகாம்கள் மூலமாக தகுதி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். கடந்த 1994-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள மாஸ்டர் பிளான் திருத்தி அமைக்கப்பட வேண்டும். தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு புதிய மாஸ்டர் பிளான் வெளியீடு விரைவுபடுத்தப்பட வேண்டும்.
பொதுத்துறை மற்றும் அரசுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய நிலுவை தொகையை உடனடியாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். சொத்து, தொழில் வரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை எவ்வித வட்டி மற்றும் நடவடிக்கைகளில் இருந்து தள்ளி வைக்க வேண்டும். கோவைக்கு மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பெரு நிறுவனங்கள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி சார்ந்த உதிரிபாகங்களை உள்மாநிலத்தில் உள்ள குறு,சிறு தொழில் முனைவோரிடம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவையில் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனத்தை அமைக்க வேண்டும், குறுந்தொழில்களுக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும், மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், குறு, சிறு தொழில் முனைவோருக்கு தனி சந்தைகளை அமைக்க வேண்டும், குறுந்தொழில்களுக்கென பிரத்யேக கடன் திட்டங்களை அறிவிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.