August 11, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, உருளை கிழங்கு மண்டி, ஜடையம்பாளையம் காய்கறி மார்கெட் ஆகிய இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சித்திக் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, புறநோயாளி சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ஆக்ஸிஜன் வசதிகள், கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நலன் கருதி அவர்களின் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி கோவை மாவட்டத்தில் 48 தனியார் மருத்துவமனைகளில் இதுவரை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சையளிக்க தற்காலிகமாக 64 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் 112 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 1874 நபர்களுக்கு சுமார் ரூ.21.57கோடி மதிப்பில் காப்பீட்டு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் தங்களிடமுள்ள கொரோனா சிகிச்சை அளிக்கும் படுக்கைகளில் 10 சதவிகித படுக்கைகளை முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டம் பற்றிய தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது இணை இயக்குநர்(மருத்துவம்) சந்திரா, துணை இயக்குநர்(சுகாதாரம்) அருணா, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் வினோத்குமார், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.