August 10, 2021
தண்டோரா குழு
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார். மேலும், கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவரும்
காவல் ஆணையரைச் சந்தித்து எஸ்.பி.வேலுமணி மீதும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் 2016 ஆம் ஆண்டு தான் காண்ட்ராக்ட் சம்பந்தமாக முன் தொகையாக ரூ.1 கோடியே 20 லட்சம் கமிஷன் கொடுத்ததாகவும் தற்போது பணத்தை திரும்பக்கேட்டால் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதேபோல சென்னையில் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.அதைப்போல் அதிமுக நிர்வாகி வடவள்ளி சந்திரசேகர் சொந்தமான பண்ணை வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் மதுக்கரையில் உள்ள வேலுமணியின் மைத்துனரும், மதுக்கரை நகர செயலாளருமான சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான கோவை, சென்னை ,காஞ்சிபுரம், திண்டுக்கல் ஆகிய ஊர்களில் 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவையில் 35 கும் மேற்பட்ட இடங்களிலும் சென்னை காஞ்சி புரத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களிலும், திண்டுக்களிலும் சோதனை நடைபெறுகிறது. வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் ,சகோதரர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.