August 9, 2021
தண்டோரா குழு
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்பேரில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் செயலாளர்கள் தெரிவித்த திருத்தங்களும் இடம்பெற்றுள்ளன.2001ல் அதிமுக அமைச்சர் பொன்னையன் வெளியிட்ட அறிக்கை, துறைவாரியாக விரிவாக இல்லை. வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என்பதற்காகவே என் பெயர் இடம்பெற்றுள்ளது. எங்களின் இலக்கை தெரிவிப்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.
திமுக ஆட்சியில் வருவாய் வளர்ச்சி 11.4% இருந்தது, கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் 4.4 சதவீதமாக குறைந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையாக ரூ.17ஆயிரம் கோடியாக இருந்தது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது.
2016-21-ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50லட்சம் கோடியாக உயர்ந்ததுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதிநிலைமை சரிந்துவிட்டது.5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை.
கடைசி 5 ஆண்டில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய். மின்சாரத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் மின் வாரியத்தை விட பீகார் மின் வாரியம் நல்ல நிலையில் உள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதையும் விளக்கியுள்ளோம். தமிழகத்தின் வருவாய் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில் வருமானம் உபரியாக இருந்தது.
சரியான வரியை சரியான நபர்களிடம் எடுத்து மருத்துவம், தொழிற்சாலை என வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.வாழ்வதற்கு சிறந்த இடமாக சொல்லப்படும் ஸ்வீடன், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகள் 30% வரியை விதிக்கிறது. வரியின் பங்கு குறைந்து வருகிறது; வரியே இல்லையென்றால் அரசு எப்படி நடைபெறும், ஜீரோ வரிவிதிப்பு என்பது அர்த்தமில்லாதது என்றார்.