July 26, 2021
தண்டோரா குழு
கோவை ரேஸ் கோர்ஸ்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் சி.எஸ்.ஐ திருமண்டல நிர்வாக குழு கூட்டம் கடந்த 19-ந்தேதிநடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
அதில் நிர்வாக குழு உறுப்பினரான தர்மபுரியை சேர்ந்த வழக்கறிஞர் நேசமெர்லின் ( 36) என்பவர் இரும்புதடியால் தாக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில் போதகர்கள், சார்லஸ் சாம்ராஜ், வில்சன் குமார் மற்றும், சுதன் அப்பாதுரை உட்பட 15 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல சி.எஸ்.ஐ. ஆலய செயலாளர் ஜேக்கப் கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் நேசமெர்லின், அமிர்தம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் செயின்ட் பால் ஆலய போதகர் வில்சன் குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த மோதல் தொடர்பாக கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஆல் சோல்ஸ் ஆலய போதகர் சார்லஸ் சாம்ராஜ் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் திமோத்தி ரவீந்தர் எடுத்துள்ளார்.