July 15, 2021
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, ஆர்.எஸ். புரம், துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடைபெற்றது.
மேலும் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.இந்நிலையில்போலீஸ் தேடுதல் வேட்டையில் இந்த திருட்டில் ஈடுபட்ட சரவணம்பட்டி அண்ணா நகரை சேர்ந்த குஞ்சன் என்ற விவேகானந்தன் ( 48) என்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் குஞ்சனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அவரிடம் இருந்து 6 மொபட், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குஞ்சன் மீது ஏராளமான இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. கைதாகி சிறையில் இருந்து வெளிவந்த குஞ்சன் மீண்டும் இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது. இருசக்கர வாகனங்களை குஞ்சன் திருடினால் உடனடியாக கோவையில் இருப்பது இல்லை. அவற்றை மேட்டுப்பாளையம், கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்று பணத்தை ஜாலியாக செலவழித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.