July 14, 2021
தண்டோரா குழு
கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, பெங்களூரு,சர்வேதேச விண்வெளி உற்பத்தி நிறுவனத்துடன் (இங்கிலாந்து நாட்டின் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன்) செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் மூலம் பொறியியல் செயல்முறை மேம்பாட்டை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
இந்நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணஸ்வாமி தலைமை வகித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் விண்வெளி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் பாலசுப்ரமணியன் பேசுகையில், தொழில் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஒன்றிணைந்து,வரும் காலகட்டங்களில் ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி திறன் மேம்பாடுகளை செயற்கை நுண்ணறிவுகளின் மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
இம்முயற்சி பயன்பாட்டிற்கு வரும் போது, பொறியியல் உற்பத்தி செயல்முறையினை உலகத்தரம் மிக்க செயல்பாடுகளை கொண்டு பல சாதனைகளை செய்ய உறுதுணையாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தீர்வுகளை கொண்டு, செயல்முறை வளர்ச்சியினை கையாள்வதில் மூலம் பல வழிகளில் நேரத்தை மிச்சப்படுத்தி உற்பத்தி திறன் வெகுவாக மேம்படும் என உறுதி கூறினார்.
2010 ஆண்டு தொடங்கப்பெற்ற இந்நிறுவனம் , சுமார் 130 விண்வெளி மற்றும் நாட்டின் எல்லை பாதுகாப்பிற்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்கிறது.இங்கிலாந்து நாட்டின் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் செயல்பெரும் இந்நிறுவனம் தற்போது இருக்கும் சிறப்பு தொழில் நுற்ப வசதிகளுடன் கூடிய வல்லமை கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்.
கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு புரிந்துணர்வு சிறப்பம்சம் பற்றி குறிப்பிடுகையில்,கல்லூரி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மேற்கொள்ளவும்,இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துறை அனுபவம் எவ்வாறு கிடைக்கப்பெறும் என்பதை சிறப்பாக விளக்கினார் .