July 13, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரத்தினபுரி நேரு பூங்கா வளாகத்தில் முன்களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனைகளை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களிடம் சளி, காய்ச்சல், இருமல் குறித்த விபரங்களை கொரோனா கள ஆய்வு பதிவேடுகளில் பதிவு செய்திட வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார். தொடர்ந்து நஞ்சப்பா சாலை ஜெயில்ரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்தும், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி கமிஷனர் சிவசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.