July 10, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்காத வகையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா பரிசோதனைகள், வீடுகள்தோறும் சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள், இருப்பை பொறுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள், உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள், தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.இதையடுத்து கோவையில் பிரதான வீதிகளில் உள்ள பெரிய அளவிலான துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன.இதனால் துணிக்கடைகள், நகைக்கடைகளில் தங்கி பணிபுரியும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோவைக்கு மீண்டும் வந்துள்ளனர்.
மேலும் கடைவீதிகளில் பல்வேறு கடைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களும் பணிக்கு வரத் துவங்கி விட்டனர்.இதையடுத்து இதுபோன்ற துணிக்கடைகள்,நகைக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
இதனை அடுத்து கோவை கிராஸ்கட் சாலையில் பிரதான துணிக்கடைகள்,நகைக்கடைகள் மற்றும் அங்கு 6,7,9 மற்றும் 11-வது வீதிகளில் உள்ள கடைகளில் நேற்று மாநகராட்சி சுகாதார துறையினர் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வேலைக்கு வருவோரால் கொரோனாப்தொற்று பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதே போல் கோவையின் புறநகர் பகுதிகளில் இருந்து வருவோருக்கும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது, ‘என்றார்.