July 9, 2021
தண்டோரா குழு
கோட்டைமேடு பகுதியில் உள்ள தமுமுக அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
மேகதாது அணை கட்டுவதை கர்நாடக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.இது குறித்து தமிழக முதல்வர் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினார். அதற்கு சரியாக பதிலளிக்காமல் அணையை கட்டும் செயலில் கர்நாடக ஈடுப்பட்டு வருகிவதாக குற்றம் சாட்டினார். அங்கு அணைக்கட்டப்படால் தமிழக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவர் என்றும் இது குறித்து விவாதிக்க ஜூலை 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
யூஏபிஏ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டான்ஸ் சாமி உயிரிழந்திருப்பது சாதாரண உயிரிழப்பாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தான் குறிப்பிடப்பட வேண்டி உள்ளது என கூறினார். கோவையில் தமுமுக கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சேவைகளை செய்து வருகிறது. போத்தனூர் கஸ்தூரி நகரில் தமுமுக ஒரு சிறிய மருத்துவமனையை நடத்தி வந்தது. இதனை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்துள்ளனர். இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விசுவாசிகளாக உள்ள மதுக்கரை தாசில்தாரும் போத்தனூர் காவல் ஆய்வளரும் போட்டு கொடுத்ததன் காரணமாக இடிக்கப்பட்டுள்ளது. அது ஆக்கிரமிப்பு பகுதியாக இருந்தாலும் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும்.
கலைஞர் முதல்வராக இருந்த போது அரசு நிலத்தில் 12 ஆண்டுகளுக்கு மேல் யாரேனும் இருந்தால் அதற்கான கட்டணங்களை வசூலித்து விட்டு அந்த இடத்தை தர வேண்டும் என்று அரசாணை இருந்தது. இதனை மீறியும் முன்னாள் அமைச்சரின் அறிவுருத்தலின் பேரில் இடித்துள்ளனர். எனவே அந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வரிட தர இருக்கின்றோம் என தெரிவித்தார்.
டி.கே மார்க்கெட் பகுதியில் செயல்ப்பட்டு வந்த சில கடை வியாபாரிகளுக்கு வேறு இடம் தருவதாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. எனினும் 88 வியாபாரிகளுக்கு கடைகள் தரப்படவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வபுரம் பகுதியில் உள்ள ஹவுஸிங் யூனிட்டிலும் 120 பேருக்கு வீடுகள் கொடுக்கப்படவில்லை. இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆயுள் தண்டனை பெற்றிருக்க கூடியவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகிறோம் என கூறிய அவர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்கள் பலரும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறி உள்ளனர். எனவே 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.