July 8, 2021
தண்டோரா குழு
மரணமடைந்த அருட்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சிவானந்தகாலணி டாடாபாத் பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார்.மத்திய அரசின் பாசிச படுகொலையை கண்டித்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் கண்டன உரையாற்றினார்.
இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், 2019 ஆண்டு உபா சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தபோது நாடாளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.
மாநில அரசுகளின் அனுமதியை கேட்காமலேயே யாரை வேண்டுமானாலும் என்ஐஏ உள்ளிட்ட மத்திய படைகள் கைது செய்யலாம் என்பதே அந்த திருத்தம்.அப்படி கைது செய்யப்படுபவருக்கு பிணையே கிடைக்காது என்பது கொடூரத்தின் உச்சம்.இதன்காரணமாகவ இதே காரணத்திற்காக உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அருட்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி மரணமடைந்துள்ளார்.
மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் முயற்சியில் தொடர்ந்து பாஜக அரசு ஈடுபடுகிறது.பீமா கோரேகான் வழக்கில் மூன்றாண்டுகள் தற்போதுவரை 16 அறிவுஜீவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், ஸ்டேன்ஸ் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டும் அனைத்து பகுதி மக்கள், அமைப்புகள் கட்சிகளை திரட்டி வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய பணிகளை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் என்றார்.