July 7, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத இணை நோயுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் வீடுகள்தோறும் சென்று இணை நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், சுவாச கோளாறு, புற்று நோய் மற்றும் இதர நோய்கள் பாதிப்பு உள்ளவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்விவரங்கள் அனைத்தும் இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி மூலம் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஜூலை 6-ம் தேதி மாலை வரை ஒரு லட்சத்து 13,925 நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதில் ஆண்கள் 54,126, பெண்கள் 59,845 ஆவர்.மேலும் இவர்களில் சர்க்கரை நோய் பாதித்தவர்கள் 42,459 பேர், ரத்த அழுத்தம் உடையவர்கள் 34 ஆயிரத்து 90 பேர், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் உடையவர்கள் 19,655 பேர். இருதய நோய் உள்ளவர்கள் 5,289 பேர், நுரையீரல் நோய் தொடர்புடையவர்கள் 1,627, புற்று நோய் உள்ளவர்கள் 298 மற்றும் இதர இணை நோய் உள்ள நபர்கள் 21,315 பேர் ஆவர்.
இவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 77,700 பேரும், அரசு மருத்துவமனையில் 22,411 பேரும்,இஎஸ்ஐ மருத்துவமனையில் 3,932 பேரும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8,296 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் கொரோனா தடுப்பூசியானது 41,738 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத, விடுபட்ட நபர்களுக்கு தனியாக தடுப்பூசி செலுத்தும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.