June 17, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராமங்களிலும் கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கிராமங்களில் கூட்டம் கூடுகிறதா? என்றும், கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் நியமிக்கப்பட்ட காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வட்டார மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து வீடு, வீடாக சென்று கொரோனா வைரஸ் தொற்று கணக்கெடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்குழு கிராம ஊராட்சி அளவில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தி உள்ளது. 228 ஊராட்சிகளில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள முடியாதவர்களுக்கு இந்த மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மையத்திற்கு வருபவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்படுகிறது. கிராமங்களில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது’’ என்றார்.