May 27, 2021
தண்டோரா குழு
தடுப்பூசி தட்டுப்பாடுகளை நீக்க உலகளாவிலய ஒப்பந்தம் செய்யப்பட்டு 3.50 கோடி தடுப்பூசிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர், சிறுமுகை மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,உணவு மற்றும்
உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ்ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் சரவணகுமார், வருவாய்
கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் (பொ) கவிதா, வட்டாட்சியர் சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக அன்னூர் அரசு மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், படுக்கைகளின் இருப்பு குறித்தும், தேவைப்படும் மருத்துவ கட்டமைப்பு
வசதிகள் குறித்தும், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் மருத்துவர்கள் மற்றும்
அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள்.
தொடர்ந்து சிறுமுகை, காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக மேட்டுப்பாளையத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் கொரோனா
தொற்று பரவல் தடுப்பு பணிகளை முழுமையாக கண்காணிக்கவும்,கட்டுப்படுத்தவும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தினசரி கள ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதுபோலவே அரசு முதன்மை செயலாளர், வணிகவரித்துறை கமிஷனர் எம்.ஏ.சித்திக் கோவை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கண்காணிப்பு அலுவலர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் தனித்தனியே ஆலோசனை
மேற்கொண்டுள்ளார்.
கிணத்துக்கடவு, மதுக்கரை மற்றும் சூலூர் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் அறிகுறியற்ற கொரோனா தொற்றால்பாதிக்கப்படுபவர்களுக்கு சுமார் 1500 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே அன்னூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை பகுதிகளிலும் இப்பகுதியிலேயே அறிகுறியற்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு
இங்கேயே சிகிச்சையளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. புதிய கொரோனா
தொற்று சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகளை அமைக்குமாறும் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளோம். இதன் மூலம் உடனுக்குடன் தொற்றால் பாதிக்கப்படுபவர்களை கண்டறிந்து
தனிமைப்படுத்துவதுடன், தொற்று பரவலையும் கட்டுப்படுதிட இயலும். மேலும் தமிழக முதலமைச்சர் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வருகின்றார். தொற்று பரவல் கோவையில் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்படும் அனைத்து மருத்துவ உதவிகளையும்
முன்னுரிமையடிப்படையில் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு அடுப்படியாக அதிக தடுப்பூசிகள் கோவை மாவட்டத்தில்தான்
வழங்கப்பட்டுள்ளது.தடுப்பூசி தட்டுப்பாடுகளை நீக்க உலகளாவிலய ஒப்பந்தம் செய்யப்பட்டு 3.50 கோடி தடுப்பூசிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்குமான தடுப்பூசிகள்
உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.