March 25, 2021
தண்டோரா குழு
மநீம கூட்டணி தான் முதல் அணி, மற்றது எல்லாம் பி டீம் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
எங்கள் கூட்டணி வெற்றி பெற கடுமையான முயற்சி செய்கிறோம் எனவும், மக்கள் நினைத்தால் எங்களது கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமெனவும் தெரிவித்தார். கமல்ஹாசனை வெளியூர்காரர் என பரப்புரை செய்வதை வேடிக்கையாக பார்க்கிறேன் எனவும், எங்களுக்கு அரசியல் தொழிலல்ல எனவும் கூறிய அவர், கமல்ஹாசன் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தார்.
யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம் என்பது தான் ஜனநாயகம் எனவும், மநீமவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை மூலம் டார்கெட் செய்கின்றனரா என்ற எண்ணம் உருவாகிறது எனவும் அவர் கூறினார். கருத்துக்கணிப்புகள் தவறாக கூட இருக்கலாம் எனவும், கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
மநீம கூட்டணி தான் முதல் அணி. மற்றது எல்லாம் பி டீம் எனவும், தேர்தல் முடிந்த பிறகு கணக்கெடுப்பு நடத்திய பின்னர், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். திராவிட கட்சிகள் வாக்கு வங்கியை பணம் கொடுத்து வைத்துள்ளனர் எனவும், எங்களது கூட்டணியின் வெற்றி காலதாமதம் ஆனாலும், வெற்றி உறுதி எனவும் அவர் தெரிவித்தார்.